snap

Monday, May 29, 2006

இந்தோனேஷியாவுக்கு இந்தியா உதவிக்கரம்

இந்தோனேஷியா நாட்டில் ஜாவா தீவில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் உலகத்தையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில் இந்தோனேஷியாவுக்கு உதவ இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதை மத்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து அவர் இந்தோனேஷிய ராணுவ மந்திரி ஜீவனோ சுதர்சனோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்டு ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இந்திய மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தோனேஷியாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும், ஒத்துழைப்பும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
இதற்கிடையே, இந்தோனேஷியாவில் பூகம்பத்தால் பலியானவர்களின் குடும்பத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தோனேஷிய பாராளுமன்ற சபாநாயகருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி உள்ளார்.
- நன்றி : மாலைமலர்

Tuesday, May 23, 2006

முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதம்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கடித்தத்தில் கூறி இருப்பதாவது:-

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எ.ஐ.எம்.எஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) அவசியம் என்பது தமிழகத்தின் அனைத்து மக்களின் நீண்ட கால குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கை ஆகும்.

மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் அல்லது நிதி உதவி அளிக்கப்படும் இந்த கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து தமிழக மக்களின் இதற்கான எதிர்பார்ப்பு பன் மடங்காக அதிகரித்து உள்ளது.
கீழ்மட்டத்தில் உள்ள வகுப்பினரின் எதிர்காலம் மத்திய அரசின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைப்படி அமைந்து இருப்பதால், இதை எந்தவித காலதாமதம் இன்றியும், தள்ளிப்போடுதல் இன்றியும் உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இட ஒதுக்கீட்டை அமல் படுத்து வதற்காக அவசர சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்பது எனது கருத்தாகும்.
எனது வேண்டுதலின் அடிப்படையில் இது தொடர்பாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் மத்திய அரசுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

Monday, May 22, 2006

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைந்தது. 1570 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 421 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் 5 லட்சத்து 27 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 42 ஆயிரத்து 946 மாணவ- மாணவிகள் 133 தேர்வு மையங்களில் பரீட்சை எழுதினார்கள். புதிய பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு நடந்த முதல் தேர்வு இதுவாகும்.
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை 9-30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இயக்குனரக அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குனர் ஜெகநாதன் வெளியிடுகிறார்.

அதே நேரத்தில் மாணவர்கள் படித்த பள்ளியில் தேர்வு முடிவு மற்றும் மார்க்கு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் .மேலும் இணையதளங்களிலும் செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலமும் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணைய தள முகவரிகள் வருமாறு:-

மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் பிளஸ்-2 மார்க் பட்டியலை பெற தினத்தந்தி சிறப்பு ஏற்பாடு செய்து உள்ளது. ஈபஏ என்று டைப் செய்து பிளஸ்-2 தேர்வு எண்ணையும் டைப் செய்து 7333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். சில வினாடிகளில் உங்கள் மொபைல் போனில் மார்க் பட்டியல் தெரியும். எடுத்துக்காட்டாக பிளஸ்-2 ரிஜிஸ்தர் நம்பர் 123456 என்று வைத்துக்கொள்வோம்.

ஈபஏ 123456 என்று டைப் செய்து 7333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு டெலிகாம் சர்க்கிள் மக்கள் தொடர்பு அதிகாரி கே.ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எம்.எஸ். சேவை மூலம் தெரிந்து கொள்வதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் செல்போனில் எச் எஸ் சி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து அத்துடன் தேர்வு எண்ணையும் பதிவு செய்து 3333 என்ற எண்ணுக்கு அனுப்பி பிளஸ்-2 முடிவை தெரிந்து கொள்ளலாம்.
போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 80 காசும், பிரிபெய்டுதாரர்களுக்கு ஒரு ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவையை சென்னை டெலிபோன் வாடிக்கையாளர்களும் பயன் அடையலாம் என்று சென்னை டெலிபோன் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் செல்போனில் 1234 டயல் செய்தால் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

Friday, May 19, 2006

`சிலிம்'ஆக இருக்கும் விமான பணிப்பெண்களுக்கே வேலை

விமான பயணிகளை தங்கள் பக்கம் கவர்ந்து இழுப்பதில் இந்தியன் ஏர்லைன்சுக்கும், மற்ற தனியார் விமான நிறுவனங்களுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிரடியாக குறைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தங்கள் சேவையை மேலும் மெருகூட்ட இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனம் சில புதிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி விமான பணிப் பெண்கள் மற்றும் ஆண் பணியாளர்கள் தங்கள் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையுடன்தான் இருக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விமான பணிப்பெண்கள் `சிலிம்' ஆக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விமான பணிப் பெண்கள் தங்கள் உயரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டிய எடைக்கு மேல் 100 கிராம் கூடுதல் எடை இருந்தாலும் வேலை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டாக இருக்கும் பெண்களுக்கு விமானத்தில் இல்லாமல் அலுவலக பணி கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 நாட்களுக்கு அவர்கள் உடல் எடையை குறைத்து சிலிம் ஆகிவிட்டால் மீண்டும் அவர்களுக்கு விமான பணிப்பெண் வேலை கொடுக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
- நன்றி: மாலைமலர்

Tuesday, May 16, 2006

தேர்தல் முடிவு : சோ

தேர்தல் முடிவு குறித்து எழுத்தாளர் சோ கூறி இருப்பதாவது:-

தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு நான் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக் காட்டி வருகிற, அவர்களுடைய கூட்டணி பலம் ஒரு முக்கியக் காரணம். ஆனால் இதையும் மீறி, அ.தி.மு.க. வெற்றி பெறக்கூடும் என்ற சூழ்நிலையும் நிலவியது. பின்னர் அது சந்தேகத்திற்குரிய தாகிற நிலை உருவாயிற்று.
இதற்குக் காரணம், தி.மு.க.வின் இலவச அறிவிப்பு கள்தான் என்ற பரவலான கருத்து, ஏற்கக் கூடியதா கவே இருக்கிறது. ஆக, தி.மு.க. கூட்டணி இத்தேர்தலில் வென்றால், அதற்கு பலமான கூட்டணி, இலவச அறிவிப்புகள் என்ற இரண்டுமே காரணங்களாக இருக்க முடியும்.

சரி, அ.தி.மு.க. கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்றால், அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?-என்பதையும் பார்ப்போம்.
தி.மு.க.வின் கூட்டணி பலத்தையும், இலவச அறிவிப்புகளையும் மீறி, அ.தி.மு.க. அணி வெற்றி பெற்றால், அது ஒரு சாதனையே. அம்மாதிரி நிகழ்ந்தால், அதற்கு முக்கிய காரணம், அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்குப் பெரிதாக ஏற்பட்ட திருப்தியாகத்தான் இருக்க முடியும். அதைத் தவிர, தி.மு.க.விற்கு போட்டியாக ஜெயலலிதா அறிவித்த இலவசங்களும் இதற்கு ஒரு காரணமாக அமையலாம்.
அ.தி.மு.க. அணி தோற்றால், அதற்கு காரணங்களாக என்ன இருக்க முடியும்?-என்றால் சிலவற்றைக் கூற முடியும்.
அம்மாதிரி நிகழ்ந்தால்- கிட்டத்தட்ட தன்னை மட்டுமே நம்பி, ஜெயலலிதா இந்தத் தேர்தலை சந்தித்தது, தன்னம்பிக்கையை காட்டினாலும், நடைமுறை சாத்தியக் கூறுகளை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு காரணமாக அமையும்.
விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏற்படத்திக் கொள்வது, அ.தி.மு.க.விற்கு நல்லது என்ற கருத்தை நாம் ஏற்கனவே சில முறைகள் தெரிவித்திருந்தோம். அப்படி நடக்காததும் ஒரு காரணமாக அமையலாம்.
தி.மு.க. இலவசங்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா இதை இரண்டு விதங்களில் சந்தித்திருக்கலாம். ஒன்று-தானும் இலவச அறிவிப்புப் போட்டியில் இறங்குவது, இதைத்தான் அவர் செய்தார்.
மற்றொரு வழி இருந்தது. தி.மு.க.வின் இலவசங்களை நம்புவதற்கு மக்கள் தயங்கிய நிலையில் அவை சாத்தியமே அல்ல என்ற வகையில் அ.தி.மு.க. அணியின் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், தி.மு.க.வின் இலவச வாக்குறுதிகளே, அக்கட்சியின் கூட்டணிக்கு பெரும் பிரச்சினையாகி இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கலாம்.
ஆனால் ஜெயலலிதா அந்த அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை. அவரும் இலவசப் போட்டியில் இறங்கிவிட்டதால் தி.மு.க. வாக்குறுதிகளும் சாத்தியமானவையே என்ற எண்ணம் பரவ, அவரும் உதவி விட்டார். அ.தி.மு.க. தோல்விக்கு ஒரு காரணமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி: மாலைமலர்

Thursday, May 11, 2006

முடிவை மாற்றிய விஜயகாந்த்


விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட் சியை தொடங்கி 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டார். விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிட்டு 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசலத்தில் வெற்றி பெற்றார்.

அவருடைய கட்சி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் அதிக ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து உள்ளது. அவரது கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே அமைந்து விட்டது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. 30 ஆயிரத்து 96 ஓட்டுகளை பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் 70 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு 52 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி பெற்ற 30 ஆயிரம் ஓட்டுகள் விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைத்திருந்தால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.

தாம்பரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மொத்தம் 89 ஆயிரம் ஓட்டு பெற்றார். ம.தி.மு.க.வுக்கு 73 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. இந்த தொகுதியில் தே.மு.தி.க. 15 ஆயிரத்து 750 ஓட்டுகள் பெற்றுள்ளது. இந்த ஓட்டு கிடைத்திருந்தால் ம.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். அச்சரபாக்கத்தில் தே.மு.தி.க. 10 ஆயிரத்து 500 ஓட்டுகளும், காஞ்சீபுரத்தில் 15 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றுள்ளது.

இது போல தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க. அதிக அளவில் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. ஓட்டுகள் பிரித்ததால் பல தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும், சில தொகுதிகளில் தி.மு.க. கூட் டணி கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.

மொத்தத்தில் விஜயகாந்த் கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
- நன்றி மாலைமலர்

Wednesday, May 10, 2006

யார்? யார்?

அனைத்து தொகுதியின் நிலவரமும் நாளை முற்பகல் 11 - க்குள் தெரிந்துவிடும். அப்போதுதான் நமக்கு நிம்மதி! அதுவரை நமது வேட்பாளர் வெற்றி பெறுவாரா? மாட்டாரா? என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கும்.

Friday, May 05, 2006

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!

உங்கள் தொகுதிக்காக தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒருவருக்கு(அவர் எக்கட்சியாக இருந்தாலும்) வாக்களியுங்கள். வாக்களிப்பது உங்கள் கடமைகளில் ஒன்றாகும்.